கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீடு அருகே இளைஞர் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!
சென்னையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் வீடு அருகில் முகத்தில் டேப் சுற்றிய நிலையில் மர்மமான முறையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட அக்கரை பகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீடு உள்ளது. அதன் அருகில் சுற்றுச் சுவர் ஒட்டிய புல் வளர்ந்து, சற்று புதர் போன்று இருக்கும். இந்த நிலையில் இந்த இடத்தில் ஒருவர் முகத்தில் டேப் சுற்றிய நிலையில் சடலமாக இருந்ததை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நீலாங்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், முகத்தில் டேப் சுற்றி சடலமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து உயிரிழந்தது கிடந்தது? யார் என்று காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
நீலாங்கரை காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தினேஷ் கார்த்திக் வீடு அருகே இறந்த நபர் வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த கலையரசன் (வயது 33) என்று தெரிய வந்தது. மேலும், கலையரசன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வேலை தேடி கடந்த ஆண்டு சென்னை வந்ததும் தெரிய வந்தது. மேலும், இறந்து கிடந்த கலையரசன் சென்னையில் பல்வேறு இடங்களில் வேலைக்காக கடந்த ஓராண்டாக முயற்சி செய்து வந்தார்.
இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் வீடு அருகே அவர் இன்று சடலமாக கிடந்தார். கலையரசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து விட்டனரா? என அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்பே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.