அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! டால்மியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூரில் டால்மியா சிமெண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கம் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழக்கு பாதிப்பு ஏற்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் சுரங்கத்துக்குள் நுழைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
இது தொடர்பாக டால்மியா நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜா ரஞ்சித் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கயர்லாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், அரியலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அன்புமணி ராமதாஸ் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, போரட்டத்தில் எந்தவித வன்முறையும் நடைபெறவில்லை எனக் கூறி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை வித்து உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.