பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க நேரிடும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க நேரிடும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாமகவின் தேர்தல் சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்க நேரிடும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

டாக்டர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி ஆகியோர் இடையே யார் பாமகவினர் என போட்டி நிலவுகிறது. இந்த விவகாரத்தில் அன்புமணி தரப்புக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது. அவரே பாமக தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் பொய் ஆவணங்களை வைத்து பாமகவை அன்புமணி அபகரித்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் சார்பிலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் சார்பில், தங்களிடம் அளிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலேயே அன்புமணிதான் பாமக தலைவர் என முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் மேலும் நீடித்தால், மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.