சத்துணவு மையத்தில் வேலை... 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்
சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு வரும் 22ம் தேதிக்குள் (22/12/2025) தகுதியானோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் செய்ய ஏற்கெனவே நேர்காணலில் நடத்தப்பட்டது. இந்நிலையில் அன்றைய நாளில் வருகை புரியாத மற்றும் பணி வேண்டாம் என தெரிவித்த சத்துணவு மையங்களில் மீண்டும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
அந்த வகையில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் 7, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் 3, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் 1 என 11 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது www.tiruvallur.nic.in தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 முதல் 40 வயதிற்குள்ளும், பழங்குடியினருக்கு 18 முதல் 40 வயதிற்குள்ளும், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3000 வழங்கப்பட உள்ளது . ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு கால முறை ஊதியத்தில் ரூ.3000 - 9000 வழங்கப்பட உள்ளது . சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
விண்ணப்பிக்கும் மையத்துக்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது .