இலங்கை கடற்படை அட்டூழியம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எல்லை பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, படகுகள் மற்றும் மீனவர்களை சிறைபிடித்து செல்வது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர், நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்களை சுற்றி வளைத்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பிடிபட்ட படகுடன் மீனவர்கள் அனைவரையும் கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இது மீனவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.