காசோலை மோசடி வழக்கு - இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை
காசோலை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அல்லிகுளம் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் இயக்குநர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனத்துக்கு பேஸ்மேன் நிறுவனம் சுமார் 35 லட்சம் ரூபாய் தொழில் மேம்பாட்டுக்காக கடனாக அளித்திருந்தது.
கடனாக பெற்ற பணத்தை ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி கொடுக்காமல் லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் காலம் தாழ்த்தி வந்தனர். பல முறை கடனை செலுத்த அறிவுறுத்தியும் அவர்கள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேஸ்மேன் நிறுவனத்தின் இயக்குநர் ராகுல் குமார் சார்பில், கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 48 லட்சம் ரூபாய் தர வேண்டும் என இயக்குநர் லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, 48 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை லிங்குசாமி வழங்கினார். ஆனால், அந்த காசோலைகள், வங்கிக் கணக்கில் பணம் இல்லை என திரும்ப வந்து விட்டன. அதனால், காசோலை மோசடி வழக்கில் ராகுல் குமார், சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் அல்லிகுளம் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், கடன் தொகையை வட்டியுடன் சேர்ந்து 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை பேஸ்மேன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கடனை கொடுக்க தவறினால் மேலும் 2 மாதங்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.