லைகா தொடர்ந்த வழக்கு: விஷால் பதிலளிக்க உத்தரவு

லைகா தொடர்ந்த வழக்கு: விஷால் பதிலளிக்க உத்தரவு

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்துக்காக, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்துப் படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் அதை மீறி விஷால் பட நிறுவனம் படங்களை வெளியிட்டு வருவதாகக்கூறி லைகா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை 30 சதவிகித வட்டியுடன் வழங்க விஷாலுக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.செந்தில்குமார் முன்பாக நடந்தது.

லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீனிவாசன், நடிகர் விஷால் தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘மகுடம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். எனவே அந்த படத்துக்காகப் பெறும் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் என்றார். அதையடுத்து இதுதொடர்பாக விஷால் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.17-க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.