சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர் வெட்டிக் கொலை

சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர் வெட்டிக் கொலை

சென்னை மெரீனா கடற்கரையின் மணல் பரப்புப் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெரீனா போலீசார், அந்த இளைஞரின் பின்பக்க இடது தலையில் ஆழமான வெட்டுக் காயம் இருந்ததைக் கண்டனர். உடனடியாக அந்த இளைஞரைச் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். யாரோ தலையில் வெட்டியதால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.



போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் சென்னை கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அந்தோணி (33) என்பதும் அவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது.


போலீசாரின் தீவிர விசாரணையில், இந்தக் கொலைச் சம்பவம் திருமணத்தை மீறிய உறவு காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். எதற்காக அந்தோணி பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதிக்கு வந்தார், யாருடன் வந்தார், அவரை வெட்டிக் கொன்றவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.