‘விஜய் அரசியல் பற்றி கருத்து சொல்ல இயலாது’ - காஜல் அகர்வால்

தமிழ் சினிமா தனக்கு தனியிடத்தைத் தந்திருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழில், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், தமிழ் சினிமா தனக்குத் தனியிடம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், நான் நடிக்கும் அடுத்த தமிழ்ப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தி மற்றும் தமிழ் திரைத்துறைகளுக்கு இடையே அதிக வித்தியாசம் இருக்கிறது. வருகிற வதந்திகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு விஜய்யை நடிகராகப் பிடிக்கும். அவருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன். நான் அவருக்கு மிகப்பெரிய ரசிகை. அவருடைய அரசியல் பற்றி என்னால் கருத்துச் சொல்ல இயலாது” என்றார்.