மகாத்மா காந்தி பெயரிலான திட்டத்தைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜக அரசு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு சின்னாபின்னமாக்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிப்பதை உறுதிப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு மாற்றாக VB G RAM G என அழைக்கப்படும், 'வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்)' என்பதை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்ய கடந்த 12-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் நாளை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வர பாஜக சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட பதிவில் கூறியிருப்பதாவது:
100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்.
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது. வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்.
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதே போல, மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள். எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே VBGRAMG என்ற திட்டத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எக்ஸ் தள பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.