“டோக்கன்கள் இல்லாவிட்டாலும் சொர்க்க வாசல் தரிசனம் செய்யலாம்” - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு தகவல்
ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்கன்கள் இல்லாவிட்டாலும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம் என அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள பக்தர்களின் தங்கும் விடுதியை(பிஏசி-2) தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு ஆய்வு செய்தார். மேலும் அவர் முடி காணிக்கை செலுத்துமிடம், லாக்கர்கள் வழங்குமிடம், அன்னபிரசாத மையம் போன்றவற்றையும் ஆய்வு செய்து, நிறை, குறைகளை பக்தர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை திருமலையில் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கண்ட 10 நாட்களுக்கு பாதுகாப்பு, அன்னதானம், தரிசனம் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.