அலிசா ஹீலி விளாசலில் அரை இறுதியில் ஆஸி!

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அலிசா ஹீலியின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபனா மோஸ்டரி 80 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், ரூபியா ஹைதர் 59 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சுதர்லேண்ட், அலானா கிங், ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
199 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் அலிசா ஹீலி 77 பந்தகளில், 20 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் விளாசினார். ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 72 பந்துகளில், ஒரு சிக்ஸர்,
12 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் சேர்த்தார்.
10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு முடிவில்லா ஆட்டம் என 9 புள்ளிகளை குவித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.