பிஹார் முதல் கட்ட தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு

பிஹார் முதல் கட்ட தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு

மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைய உள்ளது. இதனால் வேட்புமனு தாக்கல் வேகமெடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆர்ஜேடி தலைவர் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜன சக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதுபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், தானாபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இங்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரச்சாரம் செய்தார். ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.