'விஜயகாந்துடன் மீண்டும் நடித்தது போல் இருந்தது...' - சண்முக பாண்டியனை பாராட்டிய சரத்குமார்!

'விஜயகாந்துடன் மீண்டும் நடித்தது போல் இருந்தது...' - சண்முக பாண்டியனை பாராட்டிய சரத்குமார்!

 ’கொம்பு சீவி’ திரைப்படத்தில் சண்முக பாண்டியனுடன் நடித்தது மறைந்த அவரது தந்தை விஜயகாந்துடன் மீண்டும் நடித்தது போல் இருந்தது என சரத்குமார் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜகவை சேர்ந்த நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றி இருப்பது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் நிற்பேனா? என்பது எனக்கே தெரியாது”என்றார்.

நடிகர் சரத்குமார், மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுடன் ’கொம்பு சீவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில், “விஜயகாந்த் மகனுடன் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மிகவும் நன்றாக நடிக்கிறார், அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, விஜயகாந்த் சாருடன் சேர்ந்து நடித்தது போல் இருக்கிறது” என்றார்.

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசுகையில், “இருமல் மருந்து விவகாரத்தில் ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர். இருமல் மருந்தினால் தான் இறந்தார்கள் என உறுதியாக கூறப்படும் நிலையில், அந்நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது என்ன நடக்கிறது? என பார்ப்போம்” என்றார். அடுத்த வருடம் உதயநிதி சினிமாவில் நடிப்பாரா? என கேட்ட போது, ”அது எனக்கு தெரியாது நான் என்ன ஜோதிடரா? விஞ்ஞானியா? என்றார்.

சட்டமன்ற தேர்தல் குறித்து சரத்குமார் பேசுகையில், “தேர்தல் வரும் என்பது அனைவருக்கும் தெரியும், மக்கள் தேர்தலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தலில் என்ன நடக்கும்? எதற்காக வாக்களிக்க வேண்டும்? எப்படி வாக்களிக்க வேண்டும்? யாருக்காக வாக்களிக்க வேண்டும்? என சிந்திக்க ஆரம்பித்து விடுவர். ஆட்சிகள் மாற வேண்டும், காட்சிகள் மாற வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் டீக்கடை முதல் சந்திக்கும் அனைத்து இடங்களிலும் பேசுவர். தேர்தல் வரும் போது என்ன நடக்கும்? என்பது அன்று தான் தெரியும்” என்றார்.

தவெக, பாஜக கூட்டணியில் வந்துவிடுமா? என கேட்ட போது, ”நான் மாநிலத் தலைவர் கிடையாது, டெல்லி அதிகாரத்திலும் இல்லை” என்றார். திருமாவளவன் அரசியலை விட்டு வெளியே செல்ல வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். அது குறித்து கேட்ட போது, ”அவர் சொன்ன காரணம் எனக்கு தெரியாது. இருந்தாலும், அந்த விபத்தை காரணம் காட்டி அவர் சொல்லி இருக்கலாம். புதுக்கோட்டையில் திருமாவளவன் தன் கட்சி கூட்டத்தில் கட்சிக்காரரை தாக்கினார் என்றால், அது ஒரு ஆசிரியர் மாணவனை கண்டித்தது போல் எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

மேலும் பேசிய சரத்குமார், “உலக அளவில் சைபர் கிரைம் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. காலையில் பல் துலக்க செல்கிறார்களோ இல்லையோ, மொபைல் போனை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். பலர் சமூக வலைதளங்களிலேயே இருக்கின்றனர், இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் நடக்கின்றன. மக்கள் ஏமாற தயாராக இருக்கின்றனர். அதனால் ஏமாற்றுபவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அதனால் சைபர் கிரைம் குற்றங்களும் அதிக அளவில் நடந்து வருகிறது” என்றார்.