கூடா நட்பால் வந்த வினை - மதுபோதையில் நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற முதியவர்!

கூடா நட்பால் வந்த வினை - மதுபோதையில் நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற முதியவர்!

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது நண்பரை முதியவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதி்ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(46) ரெட்டியார்பட்டியை அடுத்த இட்டேரி பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். பாலகிருஷ்ணன் தனியார் வாகன ஓட்டுனராக பணி செய்து வந்ததாக தெரிகிறது. இவர் நேற்றிரவு மகிழ்ச்சி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கி, அருகில் உள்ள கோழிக்கடையில் அமர்ந்து தனது நண்பரான 60 வயது செல்வத்துடன் சேர்ந்து அருந்தி உள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, போதையில் பாலகிருஷ்ணன் செல்வத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர் செல்வம் கோழிக்கடையில் இருந்த கத்தியால் பாலகிருஷ்ணனின் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக பாலகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயப் பகுதியில் கத்திக்குத்து விழுந்துள்ளதால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உடற்கூறு பரிசோதனைக்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாள்புரம் போலீசார் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட செல்வம் என்ற முதியவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுபோதையால் தமிழகத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதனை உறுதி செய்யும் விதமாக, கோவை விமான நிலையத்தின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த 3 மர்ம நபர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.