கார்த்திகை: அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் திருகார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு்க்கான தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு அண்ணாமலையார்,உண்ணாமலையார்,அம்மன் விநாயகர், சுப்பிரமணியர், சண்டீகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
'ஏகன் அனேகன், அனேகன் ஏகன்' என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு தீபம் ஏற்றப்பட்டு அதிலிருந்து ஒரு மடக்கில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன்பின் அண்ணாமலையார் கருவறை பிரகாரத்தை சுற்றி வந்து காட்சி அளித்த பின்னர் அம்மன் சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது.
பரணி தீபத்திருவிழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ்,நடிகை ரோஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பரணி தீபத்தை வணங்கி வழிபட்டனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்தும் தீபத்திருவிழாவை காண திருவண்ணாமலை மாநகருக்கு வந்துள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி வந்து அஷ்டலிங்கங்களை வணங்கி வழிபட்டு வருகிறார்கள்.
இன்று மாலை ஆலயத்தில் உள்ள தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள உள்ளனர். அப்போது ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரிஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுக்கு காட்சி தர அப்போது சரியாக 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.. இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்களுக்கு தீபஜோதியாக காட்சி தரும்.