கனமழை: சிதம்பரம் அருகே 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

கனமழை: சிதம்பரம் அருகே 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தொடர் கன மழையால், சிதம்பரம் அருகே 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கின. பிச்சாவரம் உப்பனாற்றில் ஆகாயத் தாமரைகள் அடர்ந்துள்ளதால் வெள்ள நீர் வடியவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் கிழக்கு பகுதியில் உள்ள கணக்கரப்பட்டு, நற்கவந்தன்குடி, குமாரமங்கலம், வசபுத்தூர், நடராஜபுரம், உத்தம சோழமங்கலம், பிச்சாவரம், கீழப்பெரும்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர் கள் மழை நீரில் முழ்கியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 15,16 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. இதில் சற்று பாதிப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் மழை நீர் தேங்கத் தொடங்கியது.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக ‘டிட்வா’ புயலால் பெய்த கனமழையால் பாதிப்பு மேலும் அதிகரித்தது. சிதம்பரம் சுற்று வட்டார விளை நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,“20 நாட்களுக்குள் அடுத்தடுத்து பெய்த இரு கனமழைகள் பாதிப்பை அதிகமாக்கி இருக்கிறது. சிதம்பரம் மேற்கு பகுதியில் உள்ள வீராணம் ஏரியின் வடிகாலாக இருக்கும் வெள்ளியங் கால் ஓடை வழியாக வடியக்கூடிய தண்ணீர் பிச்சாவரம் உப்பனாற் றில் வடிந்து வருகின்றன.

இங்கு ஆகாயத்தாமரைகள் அடர்ந்து இருப்பதால் மழை நீர் சரியானபடி வெளியேற முடியாமல் விளைநிலங்களில் புகுந் துள்ளது. பிச்சாவரம் உப்பனாற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய்த் துறை, வேளாண் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கடன் வாங்கி, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்தத் தொகையை முழுமையாக வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.சிதம்பரம் அருகே கணகரப்பட்டு கிராமத்தில் மழைநீரால் முழ்கியிருக்கும் நெற்பயிர்கள்.