மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரம்: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரம்: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்திய அளவில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்ற நிலையில், மத்திய அரசு இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியலமைப்பை மீறியதாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

இதனிடையே, இந்த தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல்.எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த சில மாதங்களாக விசாரித்து வந்தது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக அனைத்து மாநிலங்களையும் சேர்த்த உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களும் தங்களின் கருத்துக்களை முன்வைக்க உத்தரவிட்டது. இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்து தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தன.

இந்த வழக்கில் நீண்ட விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் வழக்கு விசாரணையை முடிந்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரம் பிரிவு 142ஐ பயன்படுத்தி அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது. மேலும், மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.