முதல்வர், நீதிபதி குறித்து அவதூறாக பதிவிட்ட திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் கைது

முதல்வர், நீதிபதி குறித்து அவதூறாக பதிவிட்ட திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் கைது

தமிழக முதல்வர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து முகநூலில் அவதூறாக கருத்துக்கள் தெரிவித்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் நிர்மல்குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல்குமார்(35). இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

கருத்து தெரிவித்த நீதிபதி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் மீதும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதையடுத்து சாணார்பட்டி போலீஸார் நிர்மல்குமாரை நேற்று கைது செய்தனர்.