எதிர்பாராத ட்விஸ்ட்... தாண்டவம் ஆடப்போகும் வடகிழக்கு பருவமழை
அடுத்தடுத்து தீவிர புயல்கள் வரப்போவதாகவும், இந்த முறை ஜனவரி பாதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறை வடகிழக்கு பருவமழை துவங்கியதுமே வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடந்தது. இந்த நிலையில்இது பற்றி அவர் கூறியது: புயல் போன்ற வானிலை மாற்றங்கள் உருவாக கடலின் வெப்பநிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், கிழக்கு இந்திய பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நீடிக்கிறது. இதை தான் ஐஓடி எனப்படும் இந்திய பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிகழ்வு என்கின்றனர்.
இது அடுத்தடுத்து புயல் உருவாக சாதகமான சூழல். கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவு ஐஓடி தீவிரம் அடைந்து இருக்கிறது. அடுத்த 2 வாரங்களில் மேலும் தீவிரம் அடையும். இதை விட சற்று தீவிரம் குறைந்த இருமுனை எதிர்ப்பு நிகழ்வு 2019ம் ஆண்டில் அரபிக்கடலில் உருவானது. இதனால் அடுத்தடுத்து புயல் உருவானது.
ஒன்று அதிதீவிர புயலாகவும், இன்னொன்று தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இவை இல்லாமல், சில காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலங்களும் உருவாகின.