சீன ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தை கையகப்படுத்திய டாடா

சீன ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தை கையகப்படுத்திய டாடா

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் நிலவுகிறது. இதனால், சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க , அந்த போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் டாடா குழுமத்தின் ஒரு அங்கம் டைட்டன் இன்ஜினியரிங் அண்டு ஆட்டோமேஷன் நிறுவனம், சீனாவின் பிரிசிசியன் நிறுவனத்தின் இந்திய பிரிவை தன்வசப்படுத்தியுள்ளது. இது ஆப்பிள் ஐபோன் பாகங்கள் சப்ளையராகும். ஜஸ்ட்டெக் என்ற அந்த நிறுவனத்தை 880 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவில் விற்கப்படவுள்ள அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்கும் இலக்கை வலுப்படுத்தும் வகையில் இந்த வர்த்தகம் உள்ளது.

ஏற்கனவே, பெகட்ரான் என்ற நிறுவனத்தை வாங்கியதன் மூலமாக ஆப்பிள் ஐபோன் தயாரிப்பின் ஒரு பிரிவில் டாடா எலக்டிரானிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இப்போது சீன நிறுவனத்தை டைட்டன் இன்ஜினியரிங் வாங்கி இருப்பது அடுத்தகட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இதனால், ஐபோன் தயாரிப்பில் டாடாவின் பங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பரிவர்த்தனை, கடந்த ஆகஸ்டில் நிறைவடைந்து விட்டதாகவும் எச்.எஸ்.பி.சி., மற்றும் எச்.டி.எப்.சி. வங்கிகள் இதுதொடர்பான ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.