ஜஸ்ட் மிஸ்.. ஸ்ரேயாஸ் ஐயரின் விரலே போயிருக்கும்.. ஏர்போர்ட்டில் கடிக்க பாய்ந்த ரசிகரின் நாய்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை விமான நிலையத்தில் ரசிகரின் நாய் கடிக்க பாய்ந்த சம்பவம் கவனத்தை பெற்று வருகிறது. விமான நிலையத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், நாயை கொஞ்சிய போது, இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடக்கவுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
கேட்ச் பிடித்த போது, உயிருக்கு ஆபத்தான வகையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதால், சுமார் ஒரு வாரம் ஐசியூவில் சிகிச்சையில் இருந்தார். இதன்பின் குணமடைந்து இந்தியா திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர், கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியை தொடங்கினார். பின்னர் பெங்களூரில் உள்ள என்சிஏவில் பயிற்சியில் ஈடுபட்ட ஸ்ரேயாஸ் ஐயர், முழு ஃபிட்னஸ் உடன் விஜய் ஹசாரே தொடரில் கம்பேக் கொடுத்தார்.
மும்பை அணிக்காக சிறப்பாக ஆடிய அவர், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் வதோதராவில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க ஸ்ரேயாஸ் ஐயர் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது ரசிகர்கள் பலரும் அவரை வரவேற்ற போது, ஏராளமானோருக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்.
அப்போது ரசிகரின் கையில் நாய்க்குட்டி ஒன்று இருந்தது. அவர் ஸ்ரேயாஸ் ஐயருடன் நெருங்கி நின்ற போது, நாய்யை செல்லமாக கொஞ்ச கைகளை கொண்டு சென்றார். அப்போது அந்த நாய்க்குட்டி ஸ்ரேயாஸ் ஐயரின் விரலை கடிக்க பார்த்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே காயத்தில் இருந்து குணமடைந்து சுமார் 2 மாதங்களுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். இப்படியான சூழலில் நாய்க்கடியால் மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் சிக்கினால், இன்னும் சூழல் கடினமாகிவிடும் என்று ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.