விஜய் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவாரா? சீமான் கேள்வி

விஜய் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவாரா? சீமான் கேள்வி

பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடும் விஜய் கூட, ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என கூறவில்லை என்று சீமான் விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குடியில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'கடலம்மா' மாநாடு நடத்தினார். தொடர்ந்து இன்று பணகுடி பகுதியில் மேய்ச்சல் நில உரிமையை நிலை நாட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், திருநெல்வேலியில் அவர் தங்கியிருந்த திருமண மண்டபத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் அவர் போராட்டம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சீமான் தங்கியிருந்த மண்டபத்திலேயே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களை அரசே ஆக்கிரமிக்கிறது. தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு அங்கே நிலம் இருக்கிறது. அரசின் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நான் பணகுடி சென்றால் பிரச்சனையாகிவிடும் என்பதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கால்நடைகளின் வாழ்விடத்தில் அவைகளுக்கு அனுமதி வழங்காமல் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக தேவைகளுக்கு மட்டும் மணல், கற்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்தினால் 300 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த முடியும். தமிழகத்தின் பால் தேவையை ஆந்திர மாநிலம் பூர்த்தி செய்கிறது அங்கிருந்து வரும் பால் தூய்மையானதா? என்ற கேள்வி எழுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் ஒரு தோல்வியுற்ற திட்டம். சென்னையில் மெட்ரோ திட்டங்கள் மூலம் தூண்களாகவே நகர் காட்சியளிக்கிறது. அது சிங்கார சென்னை இல்லை தூண் சென்னையாக உள்ளது.

மக்களுக்கு மறைமுகமாக இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை மூலமாக பணம் கொடுக்கப்படுகிறது. இலவச திட்டங்கள் அவசியம் இல்லை. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது" என்றார்.

மேலும் பேசிய அவர், "பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடும் தம்பி விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை. பீகாரில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாஜக வெற்றியை பெற்றுவிட்டது. அது போல் தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்கலாம் ஏன் ரூ.5000 கூட கொடுக்கலாம். வாக்கிற்கு பணம் கொடுக்காத மாற்று அரசியல் தமிழகத்தில் தேவை" என்று தெரிவித்தார்.