“திமுக ஆட்சியில் இன்னும் 50% கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது” - பிரேமலதா

“திமுக ஆட்சியில் இன்னும் 50% கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது” - பிரேமலதா

 “திமுக ஆட்சியில் 50 சதவீதம் நல்லது நடந்துள்ளது. 50 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது,” என ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் புதன்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கேப்டனின் தாய் தந்தையின் பெயர் ஆண்டாள் அழகர். ஆண்டாள் பெயரில் தான் கேப்டன் அனைத்து விஷயங்களும் செய்வார்.

இன்று ஆண்டாள் தாயாரிடம் தேமுதிகவுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் நிர்வாகிகள் சந்திப்பும், கேப்டன் ரத யாத்திரை என்ற பெயரில் மக்கள் சந்திப்பும் நடத்தி உள்ளோம். பிரச்சார பயணம் முடிந்து பிப்ரவரி 3-ம் தேதி சென்னை திரும்பிய பின் கூட்டணி குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதல்வர் கூறியது அவரது கருத்து. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. திமுக ஆட்சியில் 50 சதவீதம் நல்லது நடந்துள்ளது. 50 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது,” என தெரிவித்தார்.