காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய ரவுடி மீது துப்பாக்கி சூடு - கடலூரில் பரபரப்பு
காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ரமேஷ் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சுபாஸ்கர் என்ற ரவுடி இலவசமாக காய்கறிகளை கேட்டு மிரட்டி உள்ளார். அதற்கு கடையின் உரிமையாளர் ரமேஷ் மறுத்துள்ளார். அதற்கு ரவுடி சுபாஸ்கர், எனக்கே இலவசமாக காய்கறி தர முடியாதா எனக் கூறி ரமேஷிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை சுபாஸ்கர் வெட்டினார். பின்னர், அந்தப் பகுதியில் கூட்டம் கூடியதால், அங்கிருந்து ரவுடி சுபாஸ்கர் தப்பி சென்று விட்டார். அவர் வெட்டியதில் காயம் அடைந்த ரமேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், நெய்வேலியை சேர்ந்த ரவுடி சுபாஸ்கர் என்பதனையும் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, தனிப்படை போலீசார் நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் பதுங்கி இருந்த சுபாஸ்கரை பிடிக்க சென்றனர்.
அப்போது, போலீசாரை கண்டதும் ரவுடி சுபாஸ்கர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். உடனே, போலீசார் அவரை துரத்தி சென்றனர். பின்னர், அவரை சுற்றி வளைத்த போலீசார் சுபாஸ்கரை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், சரணடைய மறுத்த சுபாஸ்கர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் இரு காவலர்களை வெட்டினார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் திகைத்து நின்றனர். உடனே, சுதாரித்துக் கொண்ட போலீசார் சுபாஸ்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், அவரது இரு கால்களிலும் துப்பாக்கி குண்டுகள் துளைத்து கீழே விழுந்தார். உடனே, அவரை போலீசார் மீட்டு நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல, ரவுடி சுபாஸ்கர் வெட்டியதில் காயம் அடைந்த இரு போலீசாரும் நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.