ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்ட அனுமதி கோரிய மனு முடித்துவைப்பு
கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்ட அனுமதி கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது.
தஞ்சை அரண்பணி அறக்கட்டளை செயலர் தியாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, “மனுதாரர் தரப்பில் தாங்களே தங்களது சொந்தப் பணத்தில் மணிமண்டபம் கட்டிக்கொள்ளவதாகவும், அதற்கான அனுமதி வழங்கக் கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள இடம் கும்பகோணம் அருள்மிகு கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமானது என அதன் செயல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்கு இயலாது. அதே சமயம் மறைந்த அரசர் ராஜராஜ சோழன் அங்கு தான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான ஆவணங்களை மனுதாரர் சமர்ப்பித்தாலும், அது தொடர்பாக கொள்கை முடிவெடுக்க வேண்டியது அரசே. நீதிமன்றம் அதில் தலையிட இயலாது.” எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.