100 நாள் வேலை திட்டம் மாற்றம்; “இதிலும் அமித் ஷாவுக்கு ஆமாம் சாமி போடப்போகிறாரா ஈபிஎஸ்?” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

100 நாள் வேலை திட்டம் மாற்றம்; “இதிலும் அமித் ஷாவுக்கு ஆமாம் சாமி போடப்போகிறாரா ஈபிஎஸ்?” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் VB-G-RAMG குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? வேளாண் சட்டங்கள், சிஏஏ போன்று இதிலும் அமித் ஷாவுக்கு ஆமாம் சாமி போடப்போகிறாரா ஈபிஎஸ் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கும் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மாற்றி, வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டம் எனப்படும், VP-G RAM G என்ற புதிய மசோதாவை மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகம் செய்துள்ளார்.
இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 15ஆம் தேதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன என்று இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?
கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? வேளாண் சட்டங்கள், சிஏஏ போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி?
MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்; நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ADMK எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா?
உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.
இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.