‘ஹேண்டில் தி பால்’ - எம்சிசியின் 33-வது விதிமுறை கூறுவது என்ன?

கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிமுறைகளை உருவாக்குவது இங்கிலாந்திலுள்ள மெரில்போன் கிரிக்கெட் கிளப் எனப்படும் எம்சிசி ஆகும். எம்சிசி உருவாக்கியுள்ள கிரிக்கெட் விதிமுறை புத்தகத்தில் 33-வது விதியாக இருப்பது ‘ஹேண்டில் தி பால்’ விதிமுறையாகும்.
எம்சிசியின் 33-வது விதிமுறை கூறுவது இதுதான். ‘ஹேண்டில் தி பால்’ அல்லது பந்தைக் கையாள்வது என்ற விதியின்படி பேட்ஸ்மேனுக்கு நடுவர் அவுட் கொடுக்கலாம். அதாவது, களத்தில் பந்துவீச்சாளர் பந்தை வீசிய பின்னர் பேட்ஸ்மேன் வேண்டுமென்றே தனது ஒரு கை அல்லது இரண்டு கைகளால் கிரிக்கெட் மட்டையைப் பிடிக்காமல் பந்தைத் தொட்டால், பந்தைக் கையாண்டதாக அர்த்தமாகும்.
அதாவது பந்தை, கிரிக்கெட் பேட்டால் தடுக்காமல் பந்தை வேண்டுமென்றே தடுப்பதுதான் “ஹேண்டில் தி பால்” விதிமுறையாகும். இதற்கு நடுவர் அவுட் கொடுக்கலாம்.
ஒருவேளை வீசப்பட்ட பந்தால், காயம் ஏற்படுவதைத் தவிர்க்க பேட்ஸ்மேன் பந்தைக் கையாண்டால் அவர் ஆட்டமிழக்காமல் இருப்பதாக முடிவு செய்யப்படும். இந்த ‘ஹேண்டில் தி பால்’ முறையில் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தால் அந்த விக்கெட் பந்து வீச்சாளர் கணக்கில் சேராது.
‘ஹேண்டில் தி பால்’ விதிமுறையால் ஆட்டமிழந்த முதல் வீரராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரஸ்ஸல் என்டீன் உள்ளார். 1957-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் ரஸ்ஸல் என்டீன், இந்த விதிமுறையின் கீழ் அவுட்டானார்.
இந்த விதிமுறையின் கீழ் இதுவரை 10 வீரர்கள் ஆட்டமிழந்துள்ளனர். இந்தியாவில் 3 மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் ‘ஹேண்டில் தி பால்’ முறையில் 3 வீரர்கள் ஆட்டமிழந்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 2001-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் இந்த விதியின் கீழ் ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங் வீசிய பந்தை, ஸ்டீவ் வாஹ் முதலில் மட்டையால் தடுத்தார். அதன் பின்னர் கீழே விழுந்த பந்து ஸ்டம்பை நோக்கிப் போக, அனிச்சையாக அதை கையால் தடுத்துவிட்டார் ஸ்டீவ் வாஹ். இந்திய வீரர்கள் ‘ஹேண்டில் தி பால்’ முறையில் அவுட் கேட்க பரிதாபமாக ஆட்டமிழந்தார் ஸ்டீவ் வாஹ். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
கடைசியாக 2015-ம் ஆண்டில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான போட்டியின்போது ஜிம்பாப்வே வீரர் சமு சிபாபா ‘ஹேண்டில் தி பால்’ விதிமுறையால் ஆட்டமிழந்தார்.