தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: கரூரில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 5-ம் தேதி கரூர் வந்த இக்குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், மருத்துவம், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் 2 பேரையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்
குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கரூர் வந்தனர். கரூர் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர்களிடம், சிறப்பு புலனாய்வுக் குழு ஏடிஎஸ்பி திருமால், வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார். இதை தொடர்ந்து, பல்வேறு துறை அரசு அலுவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
சிறப்பு புலனாய்வுக் குழுவினர், கரூர் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்வள ஆதாரத் துறை திட்ட இல்லத்தில் தங்கியிருந்துதான் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, புலனாய்வுக் குழுவில் இருந்த அதிகாரிகளில் பெரும்பாலானோர் புறப்பட்டுச் சென்ற நிலையில், ஒரு சிலர் மட்டும் தங்கியிருந்தனர்.
ஆவணங்கள் எரிப்பு: இந்த அலுவலகத்தின் தெற்கு பகுதியில் 3 இடங்களில் சில ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது நேற்று தெரியவந்தது. மேலும், 32 ஜிபி கொள்ளவு கொண்ட பென்-டிரைவ் ஒன்றும் சேதமடைந்து கிடந்துள்ளது. இதை செய்தியாளர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்ததை தொடர்ந்து, சேதமடைந்த பென்-டிரைவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் எடுத்துச் சென்றனர்.