இந்தி சினிமாவில் எல்லாமே ‘ஸ்லோ’ - தென்னிந்திய சினிமாவை புகழும் ஷ்ரத்தா தாஸ்
பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா தாஸ். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், இந்தி சினிமாவை விட தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்புகள், குறித்த நேரத்தில் முடிவடைந்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய திரைத்துறையில் பணம் கொடுத்து படங்களைப் பப்ளிசிட்டி செய்யும் முறையைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் வேலையில் கவனம் செலுத்துகிறார் கள். ஒரு படத்தில் அவர்களின் கதாபாத்திரம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பார்வையாளர்கள் நடிகர்களின் மீது கொள்ளும் அன்பு சிறப்பானது. தென்னிந்திய சினிமாவில் எனக்குப் பிடித்தது என்னவென்றால், ரசிகர்கள் உங்கள் படத்தைப் பார்க்க பல மைல்கள் பயணிப்பார்கள். அது பெரிய விஷயம்.
அதே போல அங்கு ஒரு படத்தில் கையெழுத்திட்டதும் படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற விஷயங்கள் வேகமாக நடக்கும். படக்குழுவைச் சந்திக்காமல் தொலைபேசி அழைப்பின் வழியே படங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தி சினிமாவில் எல்லாம் மெதுவாக நடக்கிறது.
இவ்வாறு ஷ்ரத்தா தாஸ் தெரிவித்துள்ளார்.