அக்.14-ல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் அக்.14-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு, இஸ்ரேல் மற்றும் பிற தொடர்புடைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
வரும், அக்.14-ம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் எனக் கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படும்.இந்தத் தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இக்கூட்டம் மூலமாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டதில்அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மேயர் ஆர்.பிரியா,தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ,இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்,விசிக தலைவர் திருமாவளவன்,மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, கொமதேக துணை பொதுச்செயலாளர் கே.நித்தியானந்தன்,, ஐயூஎம்எல் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், மார்க்சிஸ்ட் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி சிபிஐ(எம்எல்) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.