டெட் விவகாரம்: 'தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்' - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

டெட் விவகாரம்: 'தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்' - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (The RTE Act 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் 1993 (NCTE Act 1993) பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் அவர்கள் பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'சிவில் மேல்முறையீடு எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025 மற்றும் பிற வழக்குகளில் 01.09.2025 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் TET தகுதியைப் பெற வேண்டும் என்றும், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும், TET தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமமானது (National Council for Teacher Education-NCTE), 23-8-2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) போன்ற புதிய தகுதித் தேவைகளிலிருந்து ஆரம்பத்தில் விலக்கு அளித்திருந்தது. இருப்பினும், கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தற்போதைய இந்த தீர்ப்பு ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட விலக்கை மீறி TET -ஐ கட்டாயமாக்கி உள்ளது.

இதன் விளைவாக இந்த ஆசிரியர்கள் இப்போது இரண்டு ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும். இல்லா விட்டால் அவர்களின் வேலை பறிக்கப்படும் என்ற நிலை பெருத்த நிர்வாக சிரமத்தையும், ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட முறையில் சிரமத்தையும் ஏற்படுத்தும். மேலும் பணி நிபந்தனைகளில் இத்தகைய மாற்றம் மற்றும் நியமனத்திற்குப் பின் பதவி உயர்வுக்கான அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பில் இடையூறு என்பது, ஆசிரியர்களின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது.

இது ஆசிரியர்களின் நியமனத்தின்போது நடைமுறையில் இருந்த சட்டப்பூர்வ விதிகளின் கீழ் முழுமையாக தகுதி பெற்று முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையோரை நேரடியாக பாதிக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். நியமனம் செய்யப்பட்ட நேரத்தில் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்கள். சட்டப்படியான மற்றும் முறையான செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். மேலும் 2011-ல் TET அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பணியில் சேர்ந்தவர்கள்.

இந்த ஆசிரியர்களுக்கு TET- ஐ முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது என்பது அவர்கள் பணியில் தொடர்வதற்கும் மற்றும் பதவி உயர்வுகளுக்கான தகுதிக்கும் நீண்டகாலமாக நிலைநிறுத்தப்பட்ட பணி உரிமைகளில் குறிப்பிடத்தக்க இடையூறை உருவாக்குகிறது. இது மாநிலத்தில் நிர்வாகம் ரீதியாக சாத்தியம் இல்லாத ஒரு நிலையை உருவாக்குகிறது. பள்ளிக் கல்வி அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில் கடுமையான அபாயத்தை ஏற்படுத்துகிறது,' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், 'முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாடு முழுவதும் கண்கூடாகத் தெரியும். ஆட்சேர்ப்பு சுழற்சிகள், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கும் தன்மை மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணி நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில், எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆசிரியர்களை மாற்றுவது சாத்தியமற்றது.

மேலும், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தகுதியைக் காரணமாகக் கொண்டு மட்டும், நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகளை மறுப்பது என்பது, பெருத்த அளவில் சிரமத்தையும், தேக்க நிலையையும் ஏற்படுத்தும். RTE சட்டத்தின் பிரிவு 23-ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்புரைகள் காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவார்கள். இந்த குறிப்புரையினால் ஏற்படும் பாதிப்பு என்பது, பிரிவுக் கூறு 21-A-ன்கீழ் அரசியலமைப்பு ரீதியான கல்வி உரிமைக்கும் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தும்.

இவற்றை கருத்தில் கொண்டு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அப்போது தான் 23.08.2010 அன்று பணியில் இருந்த ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவதுடன், பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய இயலும்.' என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.