கே.சி.பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு; இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

கே.சி.பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு; இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அதிமுகவின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரான கே.சி. பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுகவில் போலி உறுப்பினர் சேர்க்கை செய்து பணம் வசூலித்ததாகக் குற்றஞ்சாட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலில் பேரில், கட்சியின் சூலூர் ஒன்றிய செயலாளர் கந்தவேல் கடந்த 2020 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் எனக்கு எதிராக போலி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதையடுத்து, 19 நாட்களுக்கு பிறகு கோயம்புத்தூர் அமர்வு நீதிமன்றம் என்னை ஜாமினில் விடுதலை செய்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை 2024 ஆம் ஆண்டு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தனக்கு எதிராகவும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சூலூர் ஒன்றிய அதிமுக செயலாளர் கந்தவேல் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல, தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமிக்கும், கந்தவேலுவுக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி. தனபால் முன் இன்று (ஜனவரி 19) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பி. தனபால், பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கும், கந்தவேலுவுக்கும் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.