நந்தினி நிறுவனத்தின் பெயரில் கலப்பட நெய்: பெங்களூரு தம்பதி கைது
நந்தினி என்ற பெயரில் கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
நந்தினி விநியோகஸ்தரான மகேந்திரா திருப்பூரை அடுத்துள்ள ஆலங்கட்டிபாளையம் பகுதியில், கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். அதில் நந்தினி பெயரில் டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்து நெய் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 14-ம் தேதி மகேந்திராவின் ஆலையில் சோதனை நடத்தி, அங்கு இருந்த ரூ.56.95 லட்சம் மதிப்பிலான 8 ஆயிரத்து 136 லிட்டர் நெய்யை பறிமுதல் செய்தனர். ஆலைக்கு சீல் வைத்ததுடன், மகேந்திரா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த சிவகுமார், ரம்யா தம்பதியினர் ஆலங்கட்டிபாளையத்தில் நந்தினி பெயரில் கலப்பட நெய் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு போலீஸார் சிவகுமாரையும், அவரது மனைவி ரம்யாவையும் நேற்று கைது செய்தனர்.
சாம்ராஜ்பேட்டையில் அவர்களுக்கு சொந்தமான கிடங்கை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்த ரூ.1.26 கோடி மதிப்பிலான இயந்திரங்கள், 4 கார்கள், ரூ.1.19 லட்சம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.