மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆயுதக் குழுக்களின் கைவரிசை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க அங்கு அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் அட்டாகசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலியின் கோர்பி எனும் பகுதியில் இந்தியர்கள் சிலர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் பணியாற்றிவந்த மின்சார ஒப்பந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு இதனை உறுதி செய்தூள்ளார். அவர் அளித்தப் பேட்டியில், “எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த 5 இந்தியர்கள் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர். இதனால், மற்ற இந்தியர்களை தலைநகர் பமகோவிலில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம். இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.” என்றார்.