திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலுக்குத் தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை, இரண்டு காவல் நிலைய காவலர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளுக்கு 6 மாத காலத்திற்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தச் சம்பவம் குறித்துப் பேசியதாவது:

நேற்று முன்தினம் இரவு 2.30 மணியளவில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்களான சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இந்த கொடூர சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, காலை 9.30 மணி அளவில் நேரடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மதியம் 3.30 மணி அளவில் இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டு, இரவு 10 மணிக்குச் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இருவரும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்களுக்கு 6 மாத காலத்திற்குள் உச்சபட்ச தண்டனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு, உளவியல் ஆலோசனை (Counselling) வழங்கப்படும். அதேபோல், தமிழக அரசின் சார்பில் 10 நாட்களுக்குள் உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பாதிக்கப்பட்ட பெண் தற்போது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதால், அவரிடம் வீடியோ கால் மூலம் சம்பவம் குறித்த முழு விவரங்களையும் கேட்டறியப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய A.S.குமாரி, திருவண்ணாமலையில் கோவிலுக்கு வரும் பெண்களுக்குக் காவலர்களே கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குற்றங்களுக்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் சமூக நலத்துறை மூலமாக குழந்தை திருமணங்களைத் தடுக்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதால், மாநிலத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.