ஜெமிமா, ஹர்மன்ப்ரீத் அசத்தல் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

ஜெமிமா, ஹர்மன்ப்ரீத் அசத்தல் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

லிட்ச்ஃபீல்ட் அதிரடி சதம்

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் லிட்ச்ஃபீல்டுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 77 ரன்களைச் சேர்த்த நிலையில் பெர்ரி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்ச்ஃபீல்ட் சதம் விளாசினார்.

ஜெமிமா, ஹர்மன்ப்ரீத் அசத்தல்

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா 10 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 24 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.