வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
வருமானத்தை மறைத்ததாக கூறி ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2015-16 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, 'புலி' படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.
எனவே வருமானத்தை மறைத்ததற்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
அப்போது வருமான வரித்துறை தரப்பில், "வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின்னர், 6 மாத கால அவகாசத்துக்கு உள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரி தான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.