விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனி விமானம் மூலம் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார். அவரை வரவேற்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் முண்டியடித்ததால் நிலை தடுமாறிய விஜய் திடீரென கீழே விழுந்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கி காருக்குள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'ஜனநாயகன்' திரைப்படம் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற கட்சியின் மூலம் விஜய் தீவிர அரசியலில் களம் இறங்கி உள்ள நிலையில், 'ஜனநாயகன்' தனது கடைசி திரைப்படம் என்று விஜய் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக, 'ஜனநாயகன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இந்நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர், கோலாலம்பூர் புக்கிட் ஜலீல் பல்நோக்கு விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு நடைபெறும் முதல் சினிமா விழா என்பதால், தமிழ்நாடு மற்றும் மலேசியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

இந்நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட நடிகரும், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். விஜய் வருகிற தகவல் அறிந்து அவரை பார்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் விமான நிலையமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியில் வந்ததும் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டதால் விமான நிலையம் முழுவதும் ஏதோ அசம்பாவிதம் நடந்தது போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்த களேபரத்துக்கு மத்தியில் தனது காரில் ஏறுவதற்கு நடந்து வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அவரது பாதுகாவலர்கள் சென்னை விமான நிலைய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் அவரை பத்திரமாக அழைத்து வந்தனர்.

ஆனாலும் பலத்த கூட்டத்துக்கு மத்தியில் விஜய் தனது கார் அருகே வந்தபோது திடீரென தடுமாறி கீழே விழுந்தார். உடனே பாதுகாப்புக்கு வந்திருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் விஜயை லாவகமாக மேலே தூக்கி, காரில் ஏற்றினர். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு சென்றார். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.