ஆஸ்கர் விருதை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வென்றிட வேண்டும் என்பது பேராவல்: சீமான்

ஆஸ்கர் விருதை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வென்றிட வேண்டும் என்பது பேராவல்: சீமான்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் 98-வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த திரைப்படத்துக்கான பொதுப் பட்டியலில் உலக அளவில் தேர்வான 201 படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆருயிர் இளவல் யுவராஜின் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பில், அன்புமகன் இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான திரை ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டு, மாபெரும் வெற்றிப்படைப்பான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் 98-வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த திரைப்படத்துக்கான பொதுப் பட்டியலில் உலக அளவில் தேர்வான 201 படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.

ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயர துன்பங்களை எண்ணி எண்ணி 'என்று தணியுமோ எங்கள் சுதந்திர தாகம்' என்று உள்ளுக்குள் அழும் ஒவ்வொரு தமிழனின் உள்மன உணர்வுகளை உலகிற்கு உணர்த்து மாபெரும் கலைப் படைப்பான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்று, அதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, ஈழத்தாயக விடுதலைக்கான பேராதரவை பெற்றுத்தர வேண்டும் என்ற பேராவல் மனதை தொற்றிக்கொண்டுள்ளது.

உலகத் தமிழ்ச் சொந்தங்களின் ஒருமித்த ஆதரவுடன் 'டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றெடுக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்