வி.சாந்தாராம் ‘பயோபிக்’கில் இணைந்தார் தமன்னா!
பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சாந்தாராமின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. 1940 மற்றும் 1950-களில் பல இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களை இயக்கியவர் இவர். இந்திய அளவில் அவருக்குப் புகழைச் சேர்த்த ‘பர்சாயின்’, ‘ஆத்மி’, ‘சகுந்தலா’, தஹேஜ், ‘படோஸி’, ‘சந்திரசேனா’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
‘தோ ஆங்கேன் பாரஹாத்’ எனும் இந்தி படம் இவருக்குப் பல விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது. ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்ற படத்தில் இந்தியாவின் முதல், டெக்னிக் கலரை பயன்படுத்தி இயக்கியவர் இவர். இவருடைய வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘சித்ரபதி வி சாந்தாராம்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.
“இந்திய சினிமாவுக்கு வி.சாந்தாராமின் பங்கு மகத்தானது. அவரைப் பற்றி இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இப்படம் உருவாகிறது” என்று படக் குழு தெரிவித்துள்ளது.