பாலியல் வழக்கில் சிக்கிய கேரள எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் நடவடிக்கை
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததிலை, அக்கட்சி நீக்கியுள்ளது.
பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய கருக்கலைப்பு வழக்கில் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததிலின் முன்ஜாமீன் மனுவை திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தொடர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வருவதால், ராகுல் மம்கூத்ததில் கட்சியில் தொடர்வது நெறிமுறை ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக மாறிவிடும் என கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டும் அந்தப் பெண், ராகுல் மம்கூத்ததில் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய கருக்கலைப்பு புகார் அளித்தார். இதனை தொடர்ந்து எம்எல்ஏ ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே ஆகஸ்டு மாதத்தில் சில பெண்கள், ராகுல் மம்கூத்ததில் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.