2026 தேர்தல் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத தேர்தலாக இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த்!

2026 தேர்தல் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத தேர்தலாக இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல், இதுவரை தமிழக அரசியலில் நாம் பார்த்திராத தேர்தலாக அமையும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில், தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேசிய அவர், '' இந்த கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி, ரத யாத்திரை' நடைபெறுகிறது. கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே வந்திருக்க வேண்டும் ஆனால், தாயார் மறைவினால் வர இயலாமல் போனது. புயலே வந்தாலும் ஆலோசனை கூட்டம் நடக்கும், எவ்வித இடையூறும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.

இன்று காலை காவல்துறையினர் கட்சிக் கொடிகளை அகற்றச் சொல்லி இடையூறுகளை ஏற்படுத்தியதாக கட்சியினர் கூறினார்கள். நான் போகும் இடமெல்லாம் தேமுதிகவிற்கு மக்களும், காவல்துறையினரும் பக்கபலமாக உள்ளார்கள் ஆனால், கோவையில் மட்டும் ஏன் இப்படி உள்ளது? என கேள்வி எழுப்பிய அவர், கோவை மாவட்டத்திற்கு யார் பொறுப்பாளர்? என்று சிரித்தபடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் செந்தில் பாலாஜி என கோஷமிட்டனர்.

நாம் கேப்டன் போட்டுக் கொடுத்த பாதையிலே பயணிப்போம். வெகுவிரைவில் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் அறிவிக்கப்படுவார். அவர் ஜூனியர் கேப்டன், கோவையின் செல்லப்பிள்ளை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. நாம் ஜெயித்த பிறகு இது குறித்து பிரதமரை சந்திப்பேன். 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' என்று அறிவித்தால் அதன்படி, செயல்படுத்த வேண்டும். துபாய்க்கு இணையாக மாற்ற வேண்டும். தேர்தலுக்குப் பிறகு கோவை மற்றும் மதுரை மக்களுக்காக மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தேமுதிக குரல் கொடுக்கும்.'' என்றார்.

'இங்கு சம்பாதிக்கலாம் ஆனால் ஓட்டுரிமை கூடாது'

SIR குறித்துப் பேசிய அவர், '' வட மாநிலங்களில் இருந்து பல பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள், அவர்களுக்கெல்லாம் இங்கு ஓட்டுரிமை கொடுத்து தமிழர்களாக மாற்றுவதாக பல்வேறு தகவல்கள் வருகிறது. வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணிபுரியலாம், சம்பளம் வாங்கலாம் ஆனால், ஓட்டுரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்தில் தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கும், பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்களுக்கும் தான் ஓட்டுரிமை வழங்க வேண்டும். மக்களின் ஓட்டுகளை திருட வேண்டும் என்று நினைத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்.'' என்றார்.

தேமுதிகவைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? என்று திமுகவை பெயர் குறிப்பிடாமல் கூறிய அவர், சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று நினைக்கும் கூட்டம் எது என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் போன்று லஞ்சம், ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் நாங்கள் அல்ல, யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். காசு கொடுக்காமல் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

'அனைத்து கட்சிகளும் தயார்'

தொடர்ந்து பேசிய அவர், ''கேப்டன் மறைந்து விட்டார், கட்சி மறைந்து விட்டது'' என்று கூறியவர்களெல்லாம் தற்பொழுது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். தேமுதிக அங்கம் வகிக்காமல், எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், '' நாளை மறுநாள் கோவை புறநகரில் கேப்டன் ரத யாத்திரை நடக்க இருக்கிறது. SIR பணிச்சுமையில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். SIR யில் பணிச்சுமை உள்ளது என்றால், மத்திய அரசு அதனை கவனத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

'நாம் பார்த்திடாத தேர்தலாக அமையும்'

ஜனவரி 9ம் தேதி தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து தெளிவாக அறிவிக்கப்படும். அதுவரை காத்திருக்க வேண்டும். தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் கருதி தான் கூட்டணி அமையும். இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல், இதுவரை தமிழக அரசியலில் நாம் பார்த்திடாத தேர்தலாக அமையும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு மேலும், கோவை - மதுரைக்கு இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் மறுபரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும்.'' என கூறினார்.

கூட்டணிகளை குறித்து பல கட்சிகள் வெவ்வேறு கருத்துகளை கூறும் நிலையில், 2026 தேர்தல் நான்கு முனை போட்டியாக இருக்குமா? என்ற கேள்விக்கு, '' சீமானை ஏன் விட்டு விட்டீர்கள்? அவரும் களத்தில் தானே இருக்கிறார் மேலும், மக்கள் பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களும் அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும்?'' என கேட்டுக்கொண்டார்.