இரவில் அதிர்ந்த ஜம்மு காஷ்மீர்; காவல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து - 9 பேர் பலி; பலர் படுகாயம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள நவுகாம் காவல் நிலையத்தில் நேற்றிரவு (நவ.14) ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலைய சிக்னலில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காஷ்மீர், உத்தரபிரதேசம், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கொண்ட குழு இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதை ஜம்மு - காஷ்மீர் காவல்துறை கண்டுபிடித்தது. அதில், செங்கோட்டை முன்பு ஐ20 காரில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, தானும் இறந்துபோன மருத்துவர் உமர் நபி மற்றும் அவருடைய கூட்டாளிகளான மருத்துவர்கள் முசம்மில் அகமது கேனாய், அதீல் ராதர், ஷாஹித் ஷாஹீன் ஆகியோர் அடங்குவர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களையும், சந்தேகிக்கப்படும் நபர்களையும் விசாரிக்கும் மையமாக ஜம்மு - காஷ்மீரின் நவுகாம் காவல் நிலையம் இருந்து வந்தது. மேலும், உமர் நபி தொடர்பில் இருந்த மருத்துவர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருட்களும் இந்த காவல் நிலையத்தில்தான் இருந்துள்ளது. கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் நவுகாம் காவல்நிலையத்தில் சோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், தடவியல் குழு நேற்றிரவு (நவ.14) காவல்நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டது.
அப்போது, இரவு 11:20 மணியளவில் திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதனால் காவல் நிலையமும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும், தீயணைப்புத் துறை மற்றும் ஆம்புலன்கள் அந்த பகுதிக்கு வந்து உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் சிவில் அரசு அதிகாரி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 29 பேர் ஸ்ரீநகரில் உள்ள மூன்றால் நிலை ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் ஏற்பட்ட இந்த கோர வெடி விபத்தை தொடர்ந்து, இன்று காலை காவல்துறை இயக்குநர் நளின் பிரபாத் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து காஷ்மீர் ஐஜிபி விதி குமார் பிர்டியும் அங்கு சென்று விபத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.
நவ்காம் காவல்நிலையமானது குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. இரவு நேரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் உருவான பயங்கர சத்தமானது, ஸ்ரீநகரில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் ஜம்மு நகரையே உலுக்கியிருப்பதாகவும், அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.