கூட்டநெரிசலுக்கு பிறகு கரூரில் இருந்து விஜய் புறப்பட்டதுதான் புத்திசாலித்தனம்: நாஞ்சில் சம்பத்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட போது, விஜய் அங்கேயே இருந்திருந்தால் உயிரிழப்பு 81 ஆக அதிகரித்திருக்கும் என்றும், அங்கிருந்து அவர் புறப்பட்டதுதான் புத்திசாலித்தனம் எனவும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தேனியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கூட்டத்தில் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், “தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக தவெக உருவெடுத்துள்ளது. டெல்லி எஜமானர்களையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை எஜமானர்களையும் கேள்வி கேட்கும் ஒரே தலைவர் இந்தியாவிலேயே விஜய் மட்டும்தான்.
தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை எங்கள் தலைவர் விஜய் நிரப்பி வருகிறார். விஜய்யின் விஸ்வரூபத்திற்கு முன்னால் பல கட்சிகள், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காணாமல் போகும். ’ஜனநாயகன்’ படத்தை உங்களால் தள்ளிதான் வைக்க முடியும், ஆனால், மக்களிடம் இருந்து அவரை தள்ளிவைக்க முடியாது என்பதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தால் தேர்தல் வெற்றி பெற்று விடலாம் என திமுக அரசு நினைக்கிறது. ஆனால் லேப்டாப் பெற்ற மாணவர்கள், கருணாநிதி, ஸ்டாலின் படங்களை நீக்கிவிட்டு, அதில் விஜய்யின் படத்தை வைத்து விட்டார்கள். விஜய் முதலமைச்சரானல் 1000 ரூபாய் மகளிர் திட்டதை நிறுத்திவிடுவார் என கூறுகிறார்கள். நல்ல திட்டமாக இருந்தால் அதை எங்கள் அரசு மாற்றாது” என தெரிவித்தார்.
மேலும் கரூர் சம்பவம் குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், ”கரூர் சம்பவத்தின் போது விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றது தான் புத்திசாலித்தனம். அவர் அங்கேயே இருந்தால் அவரைப் பார்ப்பதற்கு பல லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். மேலும் கூட்டம் கூடி உயிரிழப்பு 81 ஆக அதிகரித்து இருக்கும். நிலைமை மோசமாகி விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்து விஜய் புறப்பட்டு சென்றார்” எனக் கூறினார்.