பிரதமர் பேசிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்; விவசாயிகளின் அழுகுரல் கேட்கவில்லையா? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

பிரதமர் பேசிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்; விவசாயிகளின் அழுகுரல் கேட்கவில்லையா? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

ஈரப்பதம் அதிகமான நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் அழுகுரல் பிரதமருக்கு கேட்கவில்லையா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி விரிவான திட்ட அறிக்கைகளை, தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், 20 லட்சத்திற்கு குறைவான மக்கள்தொகையை காரணம் காட்டி, மதுரை, கோவைக்கான மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து, விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நவம்பர் 17 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தற்போது இந்த கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து விட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பல முறை வழங்கிய ஒன்றிய அரசு, தற்போது வழங்க மறுப்பது ஏன்?

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து, வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.