கும்கி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை!
பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி - 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது. இது நடிகர் விக்ரம் பிரபுவின் முதல் திரைப்படம் ஆகும். கும்கி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் 2 ஆம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பின் கும்கி 2 என்ற தலைப்பில் பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், கும்கி 2 திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கும்கி 2 திரைப்படத்தை தயாரிக்க, 2018 ஆம் ஆண்டு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்ற இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரபு சாலமன், கும்கி 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முன் பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயை அவர் திருப்பித் தர வேண்டும். ஆனால் கடனை திருப்பித் தராமல், நவம்பர் 14 ஆம் தேதி திரைப்படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், சினிமா பைனான்சியரான என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி கும்கி 2 திரைப்படத்தை வெளியிட அனுதிக்க கூடாது எனவும், என்னிடம் பெற்ற கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தும் வரை அந்த திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் ஒப்பந்தத்தின் படி கடன் பாக்கி இருப்பதால் திட்டமிட்டபடி நவம்பர் 14 ஆம் தேதி கும்கி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.