கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும்போது 3 பேர் உயிரிழப்பு

கேரளாவின் கொல்லம் மாவட்டம் நெடுவாத்தூர் கிராமத்தில் 3 குழந்தைகளுடன் வசித்த அர்ச்சனா (33) மற்றும் அவரது இரண்டாவது கணவர் சிவகிருஷ்ணன் (24) இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. மது போதையில் இருந்த சிவகிருஷ்ணன் அர்ச்சனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அர்ச்சனா அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.
சோனி குமார் (36) என்ற வீரர் கிணற்றில் இறங்கி உயிருடன் இருந்த அர்ச்சனாவை மீட்டு மேலே கொண்டுவர முயன்றார். போதையில் இருந்த சிவகிருஷ்ணன் கிணற்றின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்து நின்றிருந்த நிலையில் திடீரென கிணற்று சுவர் இடிந்து அர்ச்சனா மற்றும் சோனி குமார் மீது விழுந்தது. சிவகிருஷ்ணனும் உள்ளே விழுந்தார். இதையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் அர்ச்சனா, சிவகிருஷ்ணன் ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த சோனி குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.