தென் ஆப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக 2-0 என கைப்பற்றியது.
இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் முழுமையாக டெஸ்ட் தொடரை வென்று அந்த அணி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் டெஸ்ட் தொடரை அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோத உள்ளன.
இதன் முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
மேலும் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தற்போதைய தென் ஆப்பிரிக்க தொடர் சீனியர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
ஷுப்மன் கில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதால் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. ஒருநாள் போட்டித் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ஷுப்மன் கில்லும், ஸ்ரேயஸ் ஐயரும் காயம் காரணமாக விளையாடவில்லை. இவர்கள் இல்லாதது அணியை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், தற்காலிக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் தங்கள் பணிகளை கூடுதல் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.