விஜயகாந்த் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை.. திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக?
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாளான இன்று விஜயகாந்தின் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தி இருக்கிறார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எவ வேலு உள்ளிட்டோரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். இதனால் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இடம்பெறுமா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தேமுதிகவினர் குருபூஜையாக அனுசரித்து வருகின்றனர். அதேபோல் கோடம்பாக்கத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தி இருக்கிறார்.
அவருடன் அமைச்சர்கள் எவ வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். சீமான் மரியாதை செலுத்திய போது பிரேமலதா விஜயகாந்த் உடனிருக்கவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின் வந்தபோது, பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் சண்முக பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக - தேமுதிக இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அடுத்த சில நிமிடங்களிலேயே, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விஜயகாந்தை நினைவு கூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. அதேபோல் திமுக தரப்பில் ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேமுதிக தொடங்கப்பட்ட காலம் முதலே திமுகவுடன் ஒருமுறை கூட கூட்டணி அமைத்ததே இல்லை.
2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி நீண்ட வாரங்கள் காத்திருந்த போதும், விஜயகாந்த் 3வது அணியை உருவாக்கினார். இதனால் தேமுதிக வரலாற்றில் திமுகவுடன் முதல்முறையாக கூட்டணி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணியிலும் இணைய தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில், பிரேமலதா விஜயகாந்த் ஜனவரி 9ஆம் தேதி தன்னுடைய முடிவை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.